தாய்க்கு மருந்து வாங்க மெடிக்கல் சென்ற அமெரிக்க டாக்டர் வெள்ளத்தில் சிக்கி சாவு! சென்னையில் சோகம்
சென்னை: விடுமுறைக்காக சென்னைக்கு வந்திருந்த டாக்டர் ஒருவர், தனது தாய்க்கு மருந்து வாங்குவதற்காக மெடிக்கல் சென்றபோது வெள்ளத்தில் அடித்து சென்று பலியான பரிதாப சம்பவம் நந்தனம் பகுதியில் நடந்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் கிரிஜா சங்கர் (63). சென்னை மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்த கிரிஜா சங்கர், ஸ்டேன்லி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் பயிற்சி முடித்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு மனைவியோடு குடி பெயர்ந்தார்.
இருப்பினும், அவ்வப்போது சென்னை வந்து இங்குள்ள தனது தாய் மற்றும் சகோதரர்களை சந்தித்து செல்வது வழக்கம். சமீபத்தில் டாக்டர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கிரிஜா சங்கர், 15 நாட்கள் முன்பு, மனைவி மற்றும் குடும்பத்தோடு சென்னை நந்தனத்திலுள்ள பாலாஜி அப்பார்ட்மென்டுக்கு வந்து தங்கியிருந்தார். விடுமுறை முடிந்ததும், மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்த அப்பார்ட்மென்டிலிருந்து கொஞ்ச தூரத்தில், அவரது மூத்த சகோதரர் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட் உள்ளது. அங்குதான் கிரிஜா சங்கரின் 90 வயது தாயாரும் வசித்து வருகிறார்.
கடந்த புதன்கிழமை, கடுமையான மழையும், வெள்ளமும் சென்னையை வாட்டிக்கொண்டிருந்தபோது, அவரது தாயாருக்கு வாந்தி மற்றும் உபாதை ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் அவரது சகோதரர் இல்லையாம். எனவே தாய்க்கு மருந்து வாங்கிக்கொண்டு சிகிச்சையளிக்கலாம் என்று நினைத்து வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளார் கிரிஜா சங்கர்.
ஆனால், மனைவி மற்றும் அண்டை வீட்டார், இப்போது வெளியேபோக வேண்டாம், ஆபத்து என தடுத்துள்ளனர். தாய்க்கு சிகிச்சையளிக்க வேண்டுமே என்ற பதைபதைப்பில், இருந்த கிரிஜா சங்கர், அறிவுரையை கேட்காமல் வெளியே கிளம்பியுள்ளார். ஆனால், நாள் முழுவதும் அவரிடமிருந்து மனைவிக்கு எந்த தகவலும் வரவில்லை.
செல்போன் நெட்வொர்க்குகள் பழுதான நிலையில், மருத்துவமனைகளில் அவரை தேடியலைந்தனர் குடும்பத்தார். ஆனால், வெள்ளம் வடிந்த நிலையில், கிரிஜா சங்கர் இறந்த நிலையில், அவரது தாய் வாழும் அப்பார்ட்மென்ட்டின் வாகன பார்க்கிங் பகுதியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது குறைவாக இருந்த வெள்ளம், திடீரென அதிகரித்து அவரை இழுத்துச்சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. பைக் ஒன்றை பிடித்த நிலையில் சடலம் கிடந்ததால், வெள்ளத்தில் அடித்து செல்வதை தவிர்க்க, கிரிஜா சங்கர் பைக்கை இருக்க பிடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும், பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார்.