ஜாமீனில் வெளியே வந்த உடனே இந்திய ஊடகங்கள் மீது பாய்ந்த 'தெனாவெட்டு' மல்லையா!
தம்மை நாடு கடத்துவது பற்றிய விசாரணை இன்று தொடங்கியுள்ளது அதைத் தான் இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்தி காட்டுகின்றன என்று விஜய் மல்லையா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : லண்டனில் தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து ஜாமினில் வெளிவந்த மல்லையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிகைப்படுத்திக் கூறுவதே இந்திய ஊடகங்களின் வேலை' என்று சாடியுள்ளார்.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக, விஜய் மல்லையா மற்றும் அவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே, விஜய் மல்லையா, வங்கிகளுக்கு கம்பியை நீட்டிவிட்டு லண்டனுக்கு பறந்து விட்டார். அதன்பிறகு மல்லையா சொந்த நாட்டிற்கே திரும்ப முடியவில்லை என்பதோடு அங்கிருந்தபடியே அவ்வபோது அவரைப் பற்றி செய்தி வரும் போதெல்லாம் டுவிட்டரில் நையாண்டி கருத்துகளைப் போடுவதையே பிழைப்பாக வைத்துள்ளார்.
அவரை நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப லண்டனில் இருந்த விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இன்று கைது செய்தனர். ஆனால் கைதாகி 3 மணி நேரத்திலேயே விஜய் மல்லையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Usual Indian media hype. Extradition hearing in Court started today as expected.
— Vijay Mallya (@TheVijayMallya) April 18, 2017
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக ஜாமீனில் வெளிவந்த கையோடு ஒரு தெனாவெட்டு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பீர் மன்னன். 'இந்திய ஊடகங்கள் கைது நடவடிக்கையை மிகைப்படுத்திக் கூறுகின்றன' அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நாடு கடத்துவது தொடர்பான விசாரணை மட்டுமே தொடங்கியுள்ளது என்று ஹாயாக டுவீட்டியுள்ளார்.