பேராசிரியர் மூர்த்தி இறப்பு அறிவுலகத்திற்கு இழப்பு.. ஆனைமுத்து #exclusive
போராசிரியர் து. மூர்த்தியின் மரணம் அறிவுலகத்திற்கே ஏற்பட்டுள்ள இழப்பு என்று மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் தலைவர் ஆனைமுத்து கூறியுள்ளார்.
சென்னை: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் து.மூர்த்தியின் இழப்பு இந்த சமூகத்திற்கும் அறிவுலகத்திற்கும் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு என்று மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் தலைவர் ஆனைமுத்து தெரிவித்துள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பேராசிரியர் து. மூர்த்தி டெல்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தராததால் கடந்த ஞாயிற்றுக் கிழமை பல்கலைக்கழக வளாகத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து, தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியைத் தொடங்கிய பேராசிரியர் மூர்த்தி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராக விளங்கினார். அவர், பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய வழிகளைப் பயின்று சமூக பணிகளை ஆற்றியவர்.
பேராசிரியர் மூர்த்தியின் மறைவு குறித்து முதுபெரும் பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து நமது ஒன் இந்தியா தமிழ் இணையத்துக்கு தெரிவித்த கருத்து:
மூர்த்தி ஒரு பன்மொழி புலவர். தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளை முறையாக கற்றவர். ஆங்கிலம், இந்தி மொழியை நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டவர். மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய வழியில் உழைக்கும் மக்களின் ஆட்சி இந்தியாவில் வர வேண்டும் என்று பாடுபட்டவர்.
சிந்தனையாளன், தினப்புரட்சி போன்ற பத்திரிகைகளில் ஏகாத்திபத்திய எதிர்ப்பு, முதலாளிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு குறித்த பல கட்டுரைகளை எழுதியவர்.
அவருடைய மறைவு இந்த சமூகத்திற்கும் அறிவுலகத்திற்கும் பெரிய இழப்பாகும். மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பாகும் என்று ஆனைமுத்து கூறியுள்ளார்.
பேராசிரியர் து.மூர்த்தியின் உடல் இன்று மாலை 3 மணி அளவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது.