வடபழனி தீ விபத்து... அதிமுக பிரமுகர் விஜயகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சென்னை வடபழனி தீ விபத்து நடந்த கட்டிட உரிமையாளர் விஜயகுமார் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: வடபழனி தீ விபத்து நடந்த கட்டிட உரிமையாளர் விஜயகுமார் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வடபழனி பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
14 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. விதிமீறிக் கட்டப்பட்டதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்ததையும் மீறி கட்டிட உரிமையாளர் விஜயகுமார் வீடுகளை வாடகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரையடுத்து தலைமறைவாக இருந்த விஜயகுமார், கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விஜயகுமாரின் ஜாமீன் மனு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அருள்முருகன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.