வெறும் கேட்டு மட்டும்தான்யா இருக்கு, சங்கத்தை காணோம்: வடிவேலு
மதுரை: நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அந்த கடையை மூடுங்க என்று தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு.
நடிகர் சங்க தேர்தல் களத்தில் இருக்கும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு வடிவேலு ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் அவர் மதுரையில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பாண்டவர் அணி
வெறும் கேட் மட்டும் தான் இருக்கு. நடிகர் சங்கத்தை காணவில்லை. காணாமல் போன, களவு போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிக்கத் தான் விஷால் அணியில் சேர்ந்துள்ளேன்.
சமரசம்
இனி எதிரணியுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யார் வெற்றி பெறப் போகிறார்கள், யார் தோல்வியடைப் போகிறார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும். அனைத்து நடிகர்களுக்கும் நல்லது செய்யும் ஆண்டவர் அணி இந்த பாண்டவர் அணி.
அரசியல்
முன்பு தேர்தல் நேரத்தில் அரசியலுக்கு வந்தது வேறு, தற்போதைய சூழல் வேறு. அந்த அரசியலை இதில் கலந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாடக நடிகர்கள்
18ம் தேதி சங்க தேர்தல் நடக்கும்போது எந்த அணிக்கு நாடக நடிகர்களின் முழு ஆதரவு உள்ளது என்பது தெரிய வரும். நாங்கள் ஓட்டு கேட்டு யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. நாங்களே நொந்து போயுள்ளோம், இதில் பணம் கொடுக்கிறோமா?
திமுக
கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்தேன். தற்போது நான் எந்த கட்சிக்கும் போகப் போவது இல்லை. நடிகர் சங்க தேர்தலில் மட்டுமே ஏன் கவனம். தீவிர அரசியலில் ஈடுபட ஆசை இல்லை. நான் ஏன் திமுகவிற்கு சென்றேன் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அதை மறுபடியும் முதலில் இருந்து சொல்லத் தேவையில்லை என்றார் வடிவேலு.
விஜயகாந்த்
நடிகர் சங்க தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா என்று செய்தியாளர் ஒருவர் வடிவேலுவிடம் கேட்டார். அதற்கு அவரோ, அந்த கடையை மூடுங்க என்றார்.