பெண்களிடம் தவறாக நடந்தேனா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு: வைகை செல்வன்
தாம் பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப் போவதாக வைகைச் செல்வன் எச்சரித்துள்ளார்.
சென்னை: தாம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால்தான் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தார் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடருவேன் என தினகரன் கோஷ்டி பேச்சாளர் வைகைச் செல்வன் எச்சரித்துள்ளார்.
அதிமுகவின் எடப்பாடி மற்றும் தினகரன் கோஷ்டிகளிடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் வைகைச்செல்வன் இடையேயான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் வைகைச் செல்வன். இதற்கு பதிலடி கொடுத்த ராஜேந்திர பாலாஜி, ரூ500க்கு பேசும் கூலிப் பேச்சாளர் வைகைச் செல்வன்; அழுகிய தக்காளி என சாடினார்.
சினிமா போஸ்டர் ஒட்டியவர்
இதனைத் தொடர்ந்து வைகைச் செல்வன், ராஜேந்திர பாலாஜி சினிமா போஸ்டர் ஒட்டியவர் இன்று சினிமா துறைக்கே அமைச்சராகியிருக்கிறார் என காலைவாரினார். இதனிடையே சென்னையில் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அழுகிய தக்காளி
அப்போதும் வைகைச் செல்வனின் விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார் ராஜேந்திர பாலாஜி. வைகைச் செல்வன் ஒரு அழுகிய தக்காளி; சீக்குவந்த பிராய்லர் கோழி என ஏகத்துக்கும் வசைபாடினார்.
பெண்கள் பிரச்சனையால்..
பின்னர் பெண்கள் விஷயத்தில் தவறாக நடந்து கொண்டதால்தான் அவரது அமைச்சர் பதவியையே ஜெயலலிதா பறித்தார் என அதிரவும் வைத்தார். அத்துடன் தனியார் பால் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தமக்கு எதிராக வைகைச் செல்வன் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார் ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு
இதற்கு பதிலளித்துள்ள வைகைச்செல்வன், தம் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார். இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கும் கொண்டு செல்வேன் என்றார்.