பொடா வழக்கை ரத்து செய்யகோரி பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் வைகோ இன்று மனு தாக்கல்
சென்னை: வைகோ மீதான பொடா வழக்கு திங்கட்கிழமை முடிவுக்கு வர உள்ளது. பொடா வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதற்கான தீர்ப்பு நகல் இன்று பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை வைகோவின் வழக்கறிஞர் தேவதாஸ் தாக்கல் செய்தார்.
மதிமுக சார்பில் 2002 டிசம்பர் 30ஆம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வைகோ உள்பட 9 பேர் மீது திருமங்கலம் போலீஸார் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், பொடா சட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் பொடா சட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி கோரியது.
இந்தக் கோரிக்கையை 2004 செப்டம்பர் 3ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து வைகோ உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், டி.தமிழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், பொடா' சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட நீதிமன்றமே பொடா வழக்கை வாபஸ் பெற, அந்த சட்டத்திருத்தம் அனுமதி அளிக்கிறது. ஆனால், வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசே தெரிவித்தும் அதை சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை. அதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்டப்படி நாங்கள் ஏற்க முடியாது. எனவே, வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றனர்.
இந்த தீர்ப்பு நகலை இணைத்து இன்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ சார்ப்பில்தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூறப்பட்டுள்ளதாவது:
பொடா வழக்கில் இருந்து வைகோவை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது. தீர்ப்பு நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வைகோ மீது பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை முடித்து வைக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மோனி, ‘திங்கட்கிழமை இதன் மீதான விசாரணை நடைபெற்று வழக்கு முடித்து வைக்கப்படும்' என்று உத்தரவிட்டார். எனவே, வைகோ மீது பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெறும் வழக்கு திங்கட்கிழமை முடித்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.