பிரபாகரன் பிறந்த நாள் - தமிழகத்தில் எழுச்சியுடன் கொண்டாட்டம்! வைகோ, திருமா, வேல்முருகன் பங்கேற்பு!!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் தமிழகத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பிரபாகரன் பிறந்தாளை தொண்டர்களுடன் கொண்டாடினர்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவ.26. அந்த இயக்கத்தின் உயிர் நீத்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நவ. 27.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்கு முன்னர்வரை விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த பகுதிகளில் இந்நிகழ்வுகள் ஒரு வாரகாலம் கடைபிடிக்கப்படும். நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம்.
ராயப்பேட்டையில்...
2009-க்குப் பின்னரும் தமிழகம் மற்றும் ஈழத் தமிழர் வாழும் நாடுகளில் பிரபாகரன் பிறந்த நாளும் மாவீரர் நாளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பிரபாகரனின் 61-வது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடினர்.
அதிர்வேட்டுகள்- கலைநிகழ்சி
இந்த பிறந்த நாள் விழாவுக்கு நள்ளிரவிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது நள்ளிரவை அதிர வைக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பிரமாண்ட கேக்
பின்னர் பிரமாண்ட கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினர். இந்நிகழ்வில் பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
வைகோ
இதேபோல் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்களுக்கு அக்கட்சிப் பொதுச்செயலர் வைகோ, சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார்
திருமாவளவன்
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
ரத்த தான முகாம்
இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிவகங்கை மாவட்டத்தில் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடத்தினர். இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். 'எங்க குலசாமி" என பிரபாகரனுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் புகழாரம் சூட்டி போஸ்டர்கள் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேல்முருகன்
காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் மாலை நடைபெற்ற பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர்.