போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடையைத் திறப்பதா.. என்ன ஆணவம்.. வைகோ கொந்தளிப்பு
திருநெல்வேலி: வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வைகோ, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டி. இங்குள்ள டாஸ்டாக் கடையை அகற்றக்கோரி சனிக்கிழமை வைகோ தயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் உள்பட சுமார் 800 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று போலீசார் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறக்கபபட்டு அவை வழக்கம் போல் செயல்படுகின்றன். அடுத்த கட்ட போராட்டம் குறித்து வைகோவுடன் கலிங்கப்பட்டி மக்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் கலிங்கப்பட்டியில் டாஸ்டாக் கடை திறக்கப்பட்டுள்ளது. நேற்று மூடக்கோரி போராட்டம் நடந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார். கலிங்கப்பட்டியில் டாஸ்டாக் கடை மீண்டும திறக்கப்பட்டதை கண்டித்து எனது தலைமையில் இன்று ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்றார்.
மேலும், மதுவிலக்கு கோரி உயிர்விட்ட சசிபெருமாள் மகன், மகள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. முழுமதுவிலக்கை தமிழகத்தில் ஏற்படுத்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. அதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்தார்.