ஐஐடி மெட்ராஸ்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் இராணி- வைகோ சாடல்
சென்னை: அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்திற்கு விதித்த தடையை வைகோ வன்மையாக கண்டித்துள்ளதுடன், மீண்டும், அதற்கு அனுமதியளிக்க வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பு ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது. அம்பேத்கர், பெரியார் கொள்கை கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் மாணவர்களிடையே கொண்டு சென்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் பணியை, அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு செய்து வருகிறது.
அனாமதேய கடிதம்
இந்த அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் திடீரென்று தடை விதித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மோடி அரசின் ஹிந்தி மொழித் திணிப்பு, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முயற்சி மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் போன்றவற்றை அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு விவாதப்பொருளாக ஆக்கியதால், ஆத்திரமடைந்த சிலர் மத்திய அரசுக்கு அனாமேதேய புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
ஸ்மிருதி இராணி கடிதம்
உடனே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆணையின் பேரில் இத்துறையின் இணைச் செயலாளர் பிரிஸ்கா மேத்யூ, மே 15ம் தேதி சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். மே 24ம் தேதி சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம், அம்பேத்கர் பெரியாரிய சிந்தனைகளைப் பரப்பிய மாணவர் அமைப்பான ஏபிஎஸ்சிக்கு தடை விதித்துள்ளது.
பொய் சொல்லும் அமைச்சர்
ஆனால், அமைச்சர் ஸ்மிருதி இராணி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, அமைப்புக்கு தடை விதித்தது தனக்கு தெரியாது என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார். அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வதாகவும், பா.ஜ.க அரசின் செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரவல் செய்வதாகவும் ஐ.ஐ.டி. நிர்வாகம் கூறியுள்ளது.
தடை வாபஸ்
பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதும், அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளை பரப்புவதும், பெரும் குற்றம் என்பதுபோல ஐ.ஐ.டி. நிர்வாகம் சித்தரித்து மாணவர் அமைப்புக்கு தடை விதிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும். மக்களாட்சியில், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படைக் கருத்து உரிமையை பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்பதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உணர வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வரும் அம்பேத்கர்பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு மீதான தடையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.