உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாள் குடும்பத்தைக் கைது செய்வதா?... வைகோ கண்டனம்
சென்னை: அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளின் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தது அடக்குமுறை நடவடிக்கை, என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு அமுல் படுத்தக் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் ஜூலை 31 ஆம் தேதி அறப்போர் நடத்தியபோது, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவர் சாகடிக்கப்பட்டார்.
இந்நிலையில், நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரி சசிபெருமாள் குடும்பத்தினர் அவர்களின் கிராமத்துக்கு அருகே சித்தர்கோயிலில் காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது, சசிபெருமாளின் அண்ணன் வெங்கடாசலம், அவரது தம்பி செல்வம், சசிபெருமாளின் புதல்வர்கள் விவேக், நவநீதன், செல்வத்தின் மகன் ராஜா ஆகிய ஐந்து பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தச் செயல் அடக்குமுறை நடவடிக்கையாகும். ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகும். காவல்துறையின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.