கமலின் கருத்துக்கு வார்த்தைகளால் தாக்குவது அரசுக்குதான் அவப்பெயர்- நாகரீகமற்றது: வைகோ சாடல்
நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக அமைச்சர்கள் விமர்சிப்பது நாகரீகமற்றது என வைகோ சாடியுள்ளார்.
ஈரோடு: நடிகர் கமல்ஹாசனின் கருத்துகளுக்கு பதிலளித்து பேசும் அமைச்சர்களின் பேச்சு நாகரீகமற்றது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வன்கொடுமை சட்டம்
அத்துடன் கமல்ஹாசனை நாகரீகமே இல்லாத வார்த்தைகளாலும் அர்ச்சித்தனர். மேலும் கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருந்தார்.
தலைவர்கள் கண்டனம்
அமைச்சர்களின் இந்த பேச்சுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சுதந்திரம் உண்டு
நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்குப் பின்னர் தலைசிறந்த நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். அவர் உட்பட அனைவருக்குமே கருத்து சொல்லும் சுதந்திரமும் உரிமையும் உண்டு.
நாகரீகமற்றது
அப்படி கருத்து சொல்கிற கமல்ஹாசனை அமைச்சர்கள் வார்த்தைகளால் தாக்குவதும் எச்சரிப்பதும் அரசாங்கத்துக்குத்தான் அவப்பெயர். அமைச்சர்களின் இத்தகைய பேச்சுகள் நாகரீகமற்றவை. இப்படி பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.