மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் வைகோ!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான தாயகத்தில் நாளை முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறவுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் முதலில் மதிமுக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றன. மக்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இந்தக் கூட்டணியின் தலைவர்களும் செயல்பட்டு வந்தனர்.
மாற்று அரசியல் என்று பேசி வந்த இந்தத் தலைவர்கள் திடீரென தேமுதிகவை இழுக்க முயற்சித்தது மக்கள் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. கடைசியில் தேமுதிக, தமாகா என எங்குமே இடம் கிடைக்காத கட்சிகளை இவர்கள் இழுத்து வந்ததால் இந்தக் கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தது. அதை விட கொடுமையாக விஜயகாந்த்தின் செயல்கள் மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்து விட்டன. இதனால் கூட்டணி மொத்தமாக படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
இந்த நிலையில்தான் மதிமுக தனது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் சட்டசபைத் தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.