5 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை தரும் திமிர் ஏற்பட இந்திய அரசே காரணம்.. வைகோ கொந்தளிப்பு
சென்னை: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், இதில் உடனே இந்திய அரசு தலையிட வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் இன்று (30.10.2014) வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.
2011, நவம்பர் 28-ஆம் தேதி இராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி ப்போது சிங்களக் கடற்படை கைது செய்தது. ஆனால், போதைப்பொருள் கடத்தியதாகப் பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது.
மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பு அளித்து உள்ளது.
இலங்கையில் நீதித்துறை என்பது ராஜபக்சேவின் கைப்பாவையாகத்தான் செயற்பட்டு வருகின்றது. தமிழக மீனவர்கள் 578 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சித்ரவதைகள் செய்து சிறையில் அடைத்து வைப்பதும், மீனவர்களின் உயிர் உடமைகளைப் பறிப்பதும் சிங்களக் கடற்படைக்குப் பொழுதுபோக்காக ஆகிவிட்டது. இதன் உச்சமாகத்தான் இப்போது, நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.
1934-ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் எந்த நீதிமன்றமும் தூக்குத்தண்டனை தீர்ப்பு அளித்தது இல்லை. தற்போது தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டனை அளித்து இருப்பதற்கு, தமிழ் இனத்தின் மீது ராஜபட்ச கொண்டிருக்கின்ற வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும்தான் காரணம்.
தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு ராஜபட்ச கூட்டத்திற்குத் திமிரும் நெஞ்சழுத்தமும் ஏற்பட்டுள்ளதற்கு இந்திய அரசுதான் காரணம். முந்தைய காங்கிரஸ் அரசைப் போலவே, ஏன் அதைவிட ஒருபடி மேலே சென்று பாஜக அரசு தமிழர்களுக்கு எதிரான வன்மத்தைக் கடைபிடித்து வருகின்றது.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபட்சவுடன் கை குலுக்குவதும், இலங்கை அரசியல் உறவு பற்றிச் சிலாகிப்பதும் பா.ஜ.க. சார்பில் சில முகவர்களை அனுப்பி ராஜபக்சேவுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் தொடர்கின்றது.
இந்திய அரசின் சார்பில் ராணுவ அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்து சிங்கள இராஜபக்சே அரசைப் புகழ்ந்து உரைப்பதும், பொருளாதார ஒப்பந்தங்களை வலுப்படுத்துவதும் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன.
இதன் எதிரொலியாகத்தான் இலங்கை நீதிமன்றம் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து இருக்கின்றது. இந்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தூக்குத் தண்டனையை இரத்து செய்து ஐந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.