பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாத ராமதாஸுடன் வைகோ சந்திப்பு
கிருஷ்ணகிரி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை கிருஷ்ணகிரியில் சந்தித்துப் பேசினார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாஜக கூட்டணியில் வேண்டா வெறுப்பாக இடம் பெற்றுள்ளதோடு பிரச்சாரத்திலும் அதீத ஆர்வம் காட்டவில்லை. பெரும் முயற்சிக்குப் பின் பாமக வேட்பாளர்களுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந் நிலையில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே மணியை ஆதரித்து வைகோ தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தனது காலை நேர பிரசாரத்தை முடித்துவிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டாக்டர் ராமதாஸ் கிருஷ்ணகிரி வருகை தந்தார். வைகோ தங்கியிருந்த அதே விடுதியில் ராமதாஸ் தங்கினார்.
இத்தகவலை வைகோவிடம் ஜி.கே கோ.க.மணி தெரிவித்தார். உடனே தனது அறையிலிருந்த வைகோ டாக்டர் ராமதாஸ் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
பின்பு இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சார வியூகங்கள் குறித்து சுமார் 20 நிமிடங்கள் மனம் விட்டு பேசியதாக பாமக, மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.