வைகோ கார் மீது தொண்டர்கள் கார்கள் மோதல்: அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார்
மதுரை: நான்குவழி சாலையில் மாடு குறுக்கே சென்றதால் வைகோவின் கார் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பின்னால் தொண்டர்கள் வந்த கார் வரிசையாக மோதி விபத்து ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தார். மதுரையை அடுத்த மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் கத்தபட்டி சுங்கசாவடி வழியாக வந்தார். அவரது காரை பின்தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட கார்களில் ம.தி.மு.க. நிர்வாகிகளும் வந்தனர்.
வெள்ளரிபட்டியை அடுத்து வந்த போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு பசு மாடு குறுக்கிட்டது. இதை பார்த்ததும் மாடு மீது மோதாமல் இருக்க வைகோ வந்த காரை டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார்.
அப்போது பின்னால் வந்த அவரது ஆதரவாளர்களின் கார்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வைகோவின் கார் மீது மோதின. இதனால் வைகோ காரின் பின்பகுதி லேசாக சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். கார்களுக்கு மட்டுமே சிறு சேதம் ஏற்பட்டதால், வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மதுரைக்கு பயணத்தை தொடர்ந்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.