பக்தி இல்லாவிட்டாலும்.. பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வைகோ!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பக்தி இல்லாவிட்டாலும், பக்தர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கோயிலுக்கு செல்லும்போது கருப்பு துண்டு இல்லாமலேயே செல்கிறார்.
சென்னை: கருப்பு நிறத்தில் எப்போதும் துண்டு அணியும் வைகோ, கோயிலுக்கு செல்லும் போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அந்த கருப்பு நிற துண்டை நீக்கிவிட்டு செல்கிறார்.
திராவிடர் இயக்க தலைவர்களில் ஒருவரான வைகோவுக்கு கடவுள் பக்தி கிடையாது.
கருப்பு துண்டும் வைகோவும்
கருப்பு துண்டு இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார் வைகோ. பொதுவாக கருப்பு நிறம் என்றாலே அபசகுனமாக பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி வரும் பக்தர்கள் கருப்பு துணியுடன் வருவோரை காணும் போது தங்களுக்கு அபசகுனமாக கருதுகின்றனர்.
வைகோ மதிப்பு
வைகோவோ திராவிடர் இயக்க குறியீடாக சமூகத்தில் இருள் படிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு துண்டு அணிகிறார். அதேநேரத்தில் தமது கருப்பு துண்டால் பக்தர்கள் வருந்துவார்களோ என்ற எண்ணத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களுக்கு போக நேரிடும் போது கருப்பு துண்டு அணியாமல் சென்று வருகிறார். பக்தி இல்லாவிட்டாலும், பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்.
பட்டீஸ்வரம் கோயில்
மீத்தேன் திட்டம், காவிரி பிரச்சினை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு வைகோ டெல்டா பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலுக்கு வைகோ சென்றார். இது ராஜராஜ சோழன் வழிபாடு நடத்திய கோவில்.
தாராசுரம்
அப்போதும் கருப்பு துண்டு இல்லாமல்தான் அக்கோவிலுக்கு வைகோ சென்றார். அதேபோல் சோழ மன்னர்கள் கட்டிய கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வைகோ சென்றார். அப்போதூம் கருப்பு துண்டு இல்லாமலேயே வைகோ சென்றார். அர்ச்சகர்கள் அழைத்த போது வழிபாடு நடத்த மறுத்தார். சோழர் கால கட்டிடக் கலை, சிற்பக் கலையை வியந்து பார்வையிட்டார். தாராசுராம் கோவில் இருந்த வரலாற்று தகவல்களை பற்றி துண்டு தாளில் குறிப்பும் எடுத்துக் கொண்டார் வைகோ. அவரது இத்தகைய செயல்பாடுகள் பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்தது.