அப்துல் கலாம் அண்ணனுக்கு மோடி, ராகுலை அறிமுகம் செய்து வைத்த வைகோ
ராமேஸ்வரம்: அப்துல் கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கட்சி பேதமின்றி தலைவர்கள் ஒன்றிணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி, உள்ளிட்ட தலைவர்களை கலாமின் மூத்த சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவு நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய்கிழமையன்று ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, மிஷன் ஆப் லைப் கண்காட்சியை ஒரு மணி நேரம் பார்வையிட்டார்.
நேற்றைய தினம் டெல்லியிலிருந்து அவரது உடல் ரமேஸ்வரத்தக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, வைகோ அவர்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தனது கடைசி மூச்சுவரை நாட்டிற்கு சேவை செய்த அந்த சரித்திர நாயகனின் உடல் நல்லடக்கம் இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தனர்.
இறுதிச் சடக்கும் நடக்கும் இடத்தில் அப்துல் கலாம் அவர்களின் மூத்த அண்ணன் முத்துமீரான் மரைக்காயர் அருகில் அமர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்தர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காஷ்மீர் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் உள்ளிட்டத் தலைவர்களை திரு முத்துமீரான் மரைக்காயர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்பு டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார்.