டிஜிபி அசோக்குமாரை உடனடியாக மாற்றக்கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு வைகோ கடிதம்
சென்னை: ஓய்வுக்குப் பின் பணியில் நீட்டிக்கும் தமிழக டி.ஜி.பி அசோக் குமாரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள முதன்மை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
வணக்கம். தமிழ்நாட்டில் நடுநிலையான நேர்மையான தேர்தல் நடத்திட உடனடியான நடவடிக்கைக்காக இந்தக் கோரிக்கையைத் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
கே.பி. மகேந்திரன் அவர்களைத் தேர்தலுக்கான டி.ஜி.பி.யாக நியமித்திருப்பது ஒரு கண்துடைப்புச் செயல். தற்போதுள்ள டி.ஜி.பி. காவல்துறையின் உயர் அதிகாரிகள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். அந்த அதிகாரிகள்தான் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலைக் கண்காணிக்கின்ற பொறுப்பிலும் உள்ளனர். மகேந்திரனுக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தனிப்பட்ட சுதந்திரமான அதிகாரம் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்ற சந்தேகம் காவல்துறையில் எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அசோக்குமார் கடந்த 2015 ஜூன் மாதத்தில் ஓய்வு பெற்ற போதும் பணியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். பதவி நீட்டிப்பு பெற்ற ஓய்வு பெற்ற அதிகாரியாக இருப்பதால் ஆளுகின்ற அ.தி.மு.க. அரசுக்குச் சாதகமாகத்தான் செயல்படுவார். ஒருவேளை தி.மு.க. ஆட்சிக்கு வருகின்ற வாய்ப்பு ஏற்பட்டால் அந்தச் சூழ்நிலையில் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்களுக்கும் விசுவாசத்தைக் காட்டி வருகின்றார் என்று நம்பத் தகுந்த செய்திகள்மூலம் தெரிய வருகின்றது.
அசோக்குமார் மாநில உளவுத்துறை மூலமாக எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களைக் கண்காணிப்பதற்கு தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றார் என்ற தகவலும் உள்ளது. என்னுடைய செல்போன் எண்கள், என்னுடைய நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருடைய செல்போன் எண்களும் பதிவு செய்யப்படுகின்றன என்று நம்புவதற்கு உறுதியான காரணங்கள் உள்ளன.
ஓய்வு பெற்ற அசோக்குமார், பதவி நீட்டிப்பின் அடிப்படையில் டி.ஜி.பி.யாகவும், காவல்துறை தலைமை அதிகாரியாகவும் இருப்பதால் தமிழ்நாட்டில் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.
எனவே, அவரை டி.ஜி.பி. மற்றும் காவல்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் பணியில் இருக்கக்கூடிய டி.ஜி.பி. பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரை டி.ஜி.பி.யாகவும் காவல்துறை இயக்குநராகவும் பணியில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.