அப்துல்கலாம் இல்லத்தில் உறவினர்களை சந்தித்தார் வைகோ.. நேரில் ஆறுதல் கூறச் சென்றார் ஸ்டாலின்
ராமேஸ்வரம் : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உறவினர்களை நேரில் சந்தித்து ம.தி.மு.க. பொதுக் செயலாளர் வைகோ ஆறுதல் கூறினார்.
அப்துல் கலாமின் மறைவு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கலாமின் உடல் இன்று ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
அதற்கு முன்னதாக வைகோ கலாமின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்ற வைகோ அவரது அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர், பேரன் சேக் சலீம், அண்ணன் மகன் ஜெயினுல் ஆபிதீன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே அப்துல் கலாமின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார். அங்கிருந்து இன்று ராமேஸ்வரம் செல்லும் ஸ்டாலின் கலாமின் இல்லத்தில் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.