வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் இளையராஜாவுக்கு வைகோ நேரில் அஞ்சலி
சென்னை: காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டிற்கு பலியான ராணுவ வீரர் இளையராஜாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
ராணுவத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்திற்கு 3 தலைமுறைகள் பயனடையும் அளவிற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இளையராஜா குடும்பத்தினரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
ராணுவத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்திற்கு 3 தலைமுறைகள் பயனடையும் அளவிற்கு உதவித்தொகை வழங்க வேண்டும். இளையராஜாவின் மனைவி செல்வி மேல்படிப்பை முடித்துள்ளதால், அவருக்கு ராணுவத்திலேயே உயர் பதவி வழங்க வேண்டும் என்று வைகோ தெரிவித்தார்.
இளையராஜா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்ற வைகோ, அங்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார்.