மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொலை.. உடலுக்கு வைகோ அஞ்சலி
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ராம்நாத் என்பவருக்கும் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் பொன்முத்துராமலிங்கம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் மானாமதுரை வழக்கறிஞர்கள் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.இதற்காக அனைத்து வழக்கறிஞர்களும், மானாமதுரை குற்றவியல் நீதிமன்றம் வளாகம் வந்து அங்கிருந்து மொத்தமாக செல்ல திட்டமிட்டனர்.
அப்போது அங்கு வந்த ராம்நாத்துக்கும், முத்துராமலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்கம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராம்நாத்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
படுகாயமடைந்த ராம்நாத், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து வழக்கறிஞர் பொன் முத்துராமலிங்கம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த வழக்கறிஞர் ராம்நாத் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.