கருணாநிதி குறித்து ஜாதி ரீதியாக அப்படி என்னதான் பேசினார் வைகோ?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை ஜாதிய ரீதியாக மதிமுக பொதுச்செயலர் விமர்சனம் செய்ததால் அக்கட்சி தொண்டர்கள் கொந்தளித்து தமிழகம் முழுவதும் கொடும்பாவி எரித்தனர். மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரும் வைகோவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் வைகோவும் கூட கருணாநிதியிடம் தாய் மீது சத்தியம் செய்து மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இவ்வளவு சர்ச்சைக்கும் காரணமான சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று வைகோ கூறிய கருத்து இதுதான்:
தேமுதிகவின் சந்திரகுமார் செய்தது பச்சைதுரோகம்...இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்து... விஜயகாந்துக்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்...சோத்துல விஷத்தைப் போட்டிருக்கலாம்..
போடுவீங்க நீங்க... இந்த மாதிரி ஆளுக... நாங்க நம்புறவனுக்காக தலையை கொடுப்போம்...நம்புறவனுக்காக உயிரை கொடுப்போம்... இந்த மாதிரியான கீழ்த்தரமான ஈனத்தனமான வேலை....
இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்கு.. அந்த தொழிலை செய்யலாம்னு சொல்லலாம்...
எம் மேல ரொம்ப பிரியமான டிவிகள் 2,3 டிவி இங்கே இருக்கு... அவங்க இதை எடுத்துப் போட்டு உலகம் பூராவும் என்னை டேமேஜ் பண்ணிடுவாங்க... பயப்பட வேண்டியிருக்கு உங்களுக்கு... நான் இதைவிட இன்னொரு தொழில் பண்ணலாமேன்னு கேட்டுறலாம்..அது என்ன தொழில்னு சொல்றாங்க..
தறி நெசவா இருக்கும்... உழுவதா இருக்கும்...உழவு செய்யறதா இருக்கும்...பிசினஸ் பண்றதா இருக்கும்...வேற ஒரு தொழில்...
உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்... அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.... அந்த தொழிலை செய்யலாம் இவங்க ...
கலைஞரும் செய்யலாம்.. இவங்களும் செய்யலாம்.... நா...நான் ஒன்னும் தப்பா சொல்லலைங்க... அவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்... அதனால சொன்னேன்...ஒன்னும் இழிவா சொல்லலை... உலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை....
இவ்வாறு வைகோ கூறியிருந்தார்.
இதனால் திமுக தலைவர் கருணாநிதியை ஜாதிய ரீதியாக வைகோ விமர்சனம் செய்ததாக சர்ச்சை வெடித்தது. திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வைகோவின் கொடும்பாவியை எரித்தனர். இதைத் தொடர்ந்து வைகோ தாய் மீது சத்தியமாக உள்நோக்கத்துடன் பேசவில்லை; என் வரலாற்றில் தான் செய்த மிகப் பெரிய குற்றம்; ஆகையால் 'அண்ணன் கலைஞரிடம்' மன்னிப்பு கேட்கிறேன் என அறிக்கைவிட இந்த பஞ்சாயத்து ஓய ஆரம்பித்துள்ளது.