அனல் பறக்கும் அரசியலுக்கு மத்தியில் ஆங்காங்கே "ரெஸ்ட்".. வைரலாகும் வைகோவின் "ரிலாக்ஸ்" படங்கள்!
சென்னை: அனல் பறக்கும் அரசியலுக்கு மத்தியில் கிடைத்த நேரத்தில் கிடைத்த இடத்தில் ரெஸ்ட் எடுக்கும் மதிமுக பொதுச் செயலாளரின் வைகோவின் இயல்பான குணாதிசயம் இப்போது இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக அரசியல் தலைவர்கள் இருவிதம்.. செயலில் தீவிரமாக இருப்பவர்கள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் அறிக்கை உள்ளிட்டவற்றின் மூலம் இருந்த இடத்திலிருந்தே அரசியல் செய்வோர். ஆனால வைகோ அப்படி இல்லை.. இரண்டையும் கலந்து கட்டி தீயாக வேலை பார்ப்பவர்.
முதல் நாள் கன்னியாகுமரியில் இருந்தால் அடுத்த நாள் டெல்லியில் இருப்பார்.. வந்த வேலையை முடித்து விட்டு அடுத்த வேலைக்கு திருப்பூருக்குப் பறப்பார்.. அதை முடித்து விட்டு நிமிர்ந்தால் தஞ்சாவூரில் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார்.. அட என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கும்போது தேனிப் பக்கம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருப்பார்.
இப்படி புயல் போல செயல்படும் ஒரு அரசியல் தலைவர்தான் வைகோ. இப்போது வைகோவின் ஓய்வுப் படங்கள் சில பேஸ்புக், வாட்ஸ் ஆப் என சமூக வலைதளங்களில் படு வேகமாக பரிமாறப்பட்டு வருகிறது.
வேப்ப மரத்துக்குக் கீழே
சமீபத்தில் கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமணத்தில் பங்கேற்க புதுச்சேரி சென்றிருந்தார் வைகோ. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பும் வழியில் கடலூர் - புதுச்சேரி சாலையில், வயல்வெளிகள் சூழ்ந்திருக்கக்கூடிய அய்யனார்கோவில் வேப்பமரத்தின் நிழலில் சிறிது நேரம் வைகோ கையை தலைக்கு அண்டக் குடுத்து ஜாலியாக தூங்கி ஓய்வெடுத்தார்.
பாஸ்.. எப்பவுமே இப்படித்தான் பாஸு!
இன்று நேற்றல்ல எப்பவுமே வைகோ இப்படித்தான். தீவிர அரசியல்வாதியாக அவர் இருந்தாலும் கூட அவருக்குள் இருக்கும் இயல்பான மனிதக் குணங்கள் வெளிப்படுவதை தடுக்கவே மாட்டார். கலிங்கப்பட்டிக்குப் போய் விட்டால் வாலிபால் விளையாடாமல் வர மாட்டார்.
தாமிரபரணிக்குப் போனால்
அதேபோல நெல்லைக்குப் போனால் எப்படியாவது தாமிரபரணிக்குப் போய் விடுவார். அதைப் பார்க்காமல் நகர மாட்டார். குளியல் போடாமல் விட மாட்டார். மண்ணின் மைந்தராச்சே ஆசை இல்லாமலா போய் விடும்.
ஜனத்தோடு ஜனமாக
ஜனங்களோடு ஜனமாக இயல்பாக இருப்பதை விரும்புபவர் வைகோ. போராட்டக் களமானாலும் சரி, நடைப்பயணமாக இருந்தாலும் சரி, மாரத்தான் போட்டி நடத்துவதாக இருந்தாலும் சரி சாதாரண கருப்பசாமி, கோவிந்தசாமியைப் போலவே இந்த கோபால்சாமியையும் பார்க்கலாம்.
நல்லதுதானே!