வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மதிமுக தொண்டர் கட்சியை விட்டு நீக்கம்
சென்னை: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் விழாவுக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்த மதிமுக தொண்டரை கட்சியிலிருந்து நீக்கி கட்சி பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கும் நாளில் குண்டு வெடிக்கும் என்று இரயில்வே பாதுகாப்பு காவல்துறையினருக்கு அலைபேசியில் நாகர்கோவில் வட்டவிளையைச் சேர்ந்த சிவக்குமார் மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்றும் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன்.
சிவக்குமாரின் செயல் கண்டனத்துக்கு உரியது மட்டுமல்லாமல், சட்ட விரோதச் செயலாகும்.
எமது இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து கடந்த 21 ஆண்டுகளாக துளியளவு வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை. அத்தகைய எண்ணத்துக்கு கழகத்தில் அறவே இடமும் இல்லை. இந்தச் செயலில் ஈடுபட்ட சிவக்குமார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று வைகோ கூறியுள்ளார்.