என்கிட்ட பணம் இல்லை... பூத் செலவுக்கெல்லாம் தர முடியாது... கூட்டணி கட்சியினர் மீது வைகோ காட்டம்
கோவை: கூட்டணி கட்சி தொண்டர்களே இப்படி பணம் பணம் என்று கேட்டால் எப்படி? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடக்களில் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது கூறுகையில்,
தேர்தல் என்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு நூதன முறையில் வீடு, வீடாக பணம் அளிக்க உள்ளன.
பணநாயகம்
பண வெள்ளத்தை எதிர்த்து நாம் வெற்றி பெற முடியுமா என்ற வாதம் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. நாம் வெற்றி பெற முடியாது என்றும், நம் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்றும் சில ஏற்பாடுகளின்பேரில் கூறி வருகிறார்கள். இதை எல்லாம் என்னை போன்றவர்களின் பேச்சால் மட்டும் வென்றுவிட முடியாது. எந்த கட்சியையும் சேராத மாணவர்கள், வாலிபர்கள், பட்டதாரிகளாலேயே முடியும்.
குழந்தைகள்
கோவையில் நான் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் வீட்டில் தங்கியபோது 3,4 வயது குழந்தைகள் என்னிடம் வந்து சட்டசபை தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை என்று கேட்டார்கள். தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்றேன். குழந்தைகள் கூட அரசியல் பேசத் துவங்கிவிட்டனர்.
இளைஞர்கள்
இளைஞர்கள் நினைத்தால் நாம் நிச்சயம் வெற்றி பெற முடியும். இளைஞர்கள் ஒரு முடிவு எடுத்தால் மாற்றம் ஏற்படும். கோஷம், ஆர்ப்பாட்டம், கூட்டத்தால் வெற்றி வந்துவிடாது. பேய் மழையில் இருந்து தமிழகத்தை காப்பாற்றிய இளைஞர்களே தற்போதும் மாநிலத்தை காப்பாற்றப் போகிறார்கள்.
கருணாநிதி
அதிமுகவும், திமுகவும் தான் ஊழலின் அடையாளம். மதுவை கொண்டு வந்தவர் கருணாநிதி. அந்த மதுவால் நாட்டை பாழாக்கி வருபவர் ஜெயலலிதா. நாங்கள் ஊழலை ஒழிப்பதுடன், மதுவிலக்கும் கொண்டு வருவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடனை
ஏற்போம். பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை நிதியுதவி அளிப்போம். மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்.
கூட்டணி கட்சியினர்
தேர்தல் பணிக்கு என நம் கூட்டணியில் உள்ள சில கட்சியினர் லட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள். கொள்ளையடித்து கோடிக் கணக்கில் வைத்திருப்பவர்கள் பூத் செலவிற்கு ஆயிரம் ஆயிரமாக கொடுக்கலாம். அவர்களோடு கூட்டணி வைத்த தோஷத்தால் நம் கூட்டணி கட்சியினர் சிலருக்கும் அந்த நோய் ஏற்பட்டுள்ளது.
பணம் இல்லை
வேட்பாளர்களிடம் போய் பூத் செலவுக்கு பணம் கேட்கிறார்கள். கூட்டணி கட்சியினரே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை. கூட்டணி கட்சி தொண்டர்களே இப்படி பணம் பணம் என்று கேட்டால் எப்படி? பூத் செலவுக்கு ரூ.10 ஆயிரம் கேட்கிறார்கள். உண்மையில் அது மது அருந்த. நான் பணம் கொடுக்க மாட்டேன்.