நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எம்எல்ஏக்கள் பேரம் பேசியது அவமானம்: வைகோ
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசியது அவமானத்திற்கு உரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் தடுப்பணைகள் கட்டி வருவது தமிழகத்திற்கு மேலும் கேடு விளைவிக்கும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தை நாசப்படுத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஹைட்ரோ கார்பன திட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
தகவல் தொழில் நுட்ப துறையில் ஆள்குறைப்பு என்ற பெயரில், பலரை பணி நீக்கம் செய்கின்றனர். இவர்களது பணியை பாதுகாக்க மத்திய, மாநில அரசு பணி நீக்க தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்
நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசியது அவமானத்திற்கு உரியது. உயர்நீதிமன்றத்தில், அதுதொடர்பான வழக்கு நிரூபிக்கப்படும் பட்சத்தில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றார் வைகோ.