என்னது அன்புமணி தோற்றுப்போய்விடுவாரா? உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சியடைந்த வைகோ
உளுந்தூர்பேட்டை: தினமலர் மற்றும் நியூஸ் 7 இணைந்து இன்று தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. பென்னாகரத்தில் போட்டியிடும் அன்பு மணி 3 வது இடத்திற்கு தள்ளப்படுவார் என கூறுகின்றனர். இது நம்பும் படியாக இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பு ஒரு சார்பாக நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டிய வைகோ, இந்த கருத்துக்கணிப்புகளையும் மீறி எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தை ஆதரித்து இன்று வைகோ வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் பேசிய வைகோ, இன்று காலையில் தினமலர் , நியூஸ் 7 தொலைக்காட்சி இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு பற்றி கருத்து கூறினார்.
திமுகவை வெற்றி பெற வைக்க திட்டம்
மேற்கு மண்டலத்தில் எடுத்த கணிப்பில் மொத்தம் 57 தொகுதிகளில் திமுக 33 தொகுதிகளிலும், அதிமுக 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது .திமுகவை வெற்றி பெற செய்ய வைக்கும் சதி திட்டம்.
பொய்யான கருத்துக்கணிப்பு
இந்த கருத்துக்கணிப்பு பொய்யானது என்று கூறிய வைகோ இந்த கருத்துக்கணிப்பையும் மீறி எங்களின் கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார். மாணவர்கள், விவசாயிகளிடம் கேட்டு யாரும் பார்க்காமல் ஒட்டி போடப்பட்டது, பிரித்து பார்த்தோம் என்று சொல்கின்றனர். குறிப்பாக இது திமுகவினராக பார்த்து இந்த கேள்வியை கேட்டுள்ளனர்.
நம்ப முடியவில்லை
இதில் கொடுமை என்னவென்றால் பென்னாகரத்தில் போட்டியிடும் அன்பு மணி 3 வது இடத்திற்கு தள்ளப்படுவார் என கூறுகின்றனர். இது நம்பும் படியாக இல்லை. பாமக எங்களின் எதிரி தான் இருந்தாலும் இது தவறானது என்று சொல்கிறேன்.
எங்கள் கூட்டணி வெல்லும்
மக்கள் நல கூட்டணி தோல்வியை தழுவும் என்றும் கூறப்பட்டுள்ளது . இன்று காலை முதல் நாளிதழ் பார்த்து எங்களின் தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர். எங்களை வலுவிழக்க செய்யும் சதி ஆகும். இதனை முறியடித்து எங்கள் அணி வெற்றி பெறும், முதல்வராக விஜயகாந்த் பதவியேற்பார் என்றார்.
செய்தி போடுவதில்லை
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்ட வைகோ, தினமலர் திமுகவிற்கு பக்கம், பக்கமாக செய்தி வெளியிடுகிறது என்றார். குறிப்பாக ஸ்டாலினுக்கு ஒரு பக்கம், கனிமொழிக்கு ஒரு பக்கம் ஒதுக்குகின்றனர். எனக்கு அரை பத்தி ஒதுக்குகின்றனர். இதாவது தருகின்றனரே என்று நினைத்து கொள்கிறேன் என்றார் வைகோ.
விஜயகாந்த் பிரச்சாரத்தில் அன்புமணி
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு பிரச்சாரம் செய்யப்போன வைகோ, அன்புமணி தோல்விக்கு அதிர்ச்சி தெரிவித்தது ஏன் என்றுதான் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் இப்போதைய பேச்சாக உள்ளது.