புதுசு புதுசாக குடிக்கிறார்கள்.. வைகோ வேதனை
ஒரத்தநாடு: ஊரெல்லாம் மதுக் கடைகளை அரசு திறந்து வைத்துள்ளதால், புதுசு புதுசாக இளைஞர்கள் குடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும், மீத்தேன் வாயுத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் வைகோ.
டிசம்பர் 12ம் தேதி தொடங்கிய இந்தப் பிரசாரத்தின் கீழ் நேற்று அவர் ஒரத்தநாடு பகுதியில் பிரசாரம் செய்து பேசினார்.
வைகோ பேசுகையில், காவிரியில் அணைகட்டுவோம். அதற்கு மத்திய அரசு அனுமதியும் கிடைக்கும் என்று கர்நாடகா சொல்லி வருகிறது. ஆனால் மின்னல் வேக பிரதமர் மோடி என்ன சொல்கிறார். பேசாமால் இருக்கிறார்.
அந்த அணை கட்டினால் விவசாயம் மட்டுமில்லை குடிதண்ணீரும் பாதிக்கப்படும். மேலும் 4 அணைகள் கட்டவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதை தடுக்க நாம் போராட வேண்டும். அதற்காக வீட்டுக்கு ஒரு இளைஞர் என்னுடன் போராட வரவேண்டும் என்று அழைக்க தான் இந்த சுற்றுப்பயணம். நீங்கள் என்னுடன் வரும்போது நாடே திரும்பிப் பார்க்கும் போராட்டம் நடத்துவோம்.
அதேபோல மீத்தேன் எடுத்து நம்ம விவசாயத்தை அழிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். நாம் உயிரைக் கொடுத்தாவது அதை தடுப்போம்.
அடுத்தது மது அரக்கன். இன்று ஊருக்கு ஊர் மதுக்கடைகளை திறந்து இளைஞர்களை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது புதுசு புதுசா இளைஞர்கள் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பது கவலையும் வருத்தமும் அளிக்கிறது என்றார் வைகோ.