என் தம்பிக்கு மூளை சரியில்லை, சசிகலா புஷ்பாவை நான் ஆதரிக்கவில்லை.. வைகுண்டராஜன்
சென்னை: தன் தம்பி குமரேசனுக்கு மூளைக்கோளாறு இருப்பதாகவும்,அதனால்தான் தன் மீது அவதூறுகளை கூறி வருவதாகவும் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்ட ராஜன் தெரிவித்துள்ளார். எம்.பி சசிகலா புஷ்பாவிற்கு தான் எந்த விதத்திலும் ஆதரவளிக்கவில்லை எனவும் வைகுண்டராஜன் கூறியுள்ளார்.
பிரபல தாது மணல் ஏற்றுமதி நிறுவனமான விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜனின் தம்பி குமரேசன், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், விவி மினரல்ஸ் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். இது குறித்து அனைத்து ஆதாரங்களும் தன் வசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன்,தனது தம்பி குமரேசன் கூறிய அனைத்தையும் மறுத்துள்ளார். தனது தம்பி மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு கடற்கரையிலுள்ள மணலை மட்டுமே தாங்கள் ஏற்றுமதி செய்து வருவதாகவும், இதற்கான கட்டணத்தையும் அரசுக்கு முறையாக செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவிற்கு தான் எந்த விதத்திலும் ஆதரவளிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.