அடுக்கடுக்கான புகார்களை வெளியிட்ட குமரேசன்... வைகுண்டராஜனின் சித்தி மகனாம்!
சென்னை: தாது மணல் விவகாரத்தில் தொழிலதிபர் வைகுண்டராஜன் மீது அடுக்கடுக்கான புகார்களை வெளியிட்ட குமரேசன் குறித்து பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் என அறிமுகம் செய்து கொண்ட குமரேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2013-ம் ஆண்டு தாது மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னரும் சட்டவிரோதமாக 50 லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக ஏற்று மதி செய்துள்ளார் வைகுண்டராஜன்... இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டினார் குமரேசன்.
இதற்கு ஆதாரமாக 400 பக்க ஆவணங்களையும் கொடுத்திருந்தார் குமரேசன். வைகுண்டராஜனின் உடன்பிறந்த சகோதரரே இப்படி புகார் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் வைகுண்டராஜன் குடும்பத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் சொத்து தகராறின் உச்சகட்டமே குமரேசனின் புகார் என்று கூறப்படுகிறது. அதாவது வைகுண்டராஜனின் தந்தைக்கு 2 மனைவிகள். இதில் 2-வது மனைவியின் மகன்தான் குமரேசன்.
குமரேசனை முதல் மனைவியின் மகன்களான வைகுண்டராஜனும் அவரது சகோதரரும் நீண்டகாலமாகவே ஒதுக்கி வைத்துவிட்டனர். இதனால் வைகுண்டராஜனுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார் குமரேசன்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா விவகாரத்தில் அரசுக்கு எதிராக வைகுண்டராஜன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் வைகுண்டராஜனுக்கு கடும் நெருக்கடியை தர வேண்டும் என்பதற்காக இத்தனை ஆண்டுகாலம் திரட்டி வைத்திருந்த அத்தனை ஆவணங்களையும் ரிலீஸ் செய்திருக்கிறாராம் குமரேசன் என்கிறது நெல்லை தகவல்கள்.