கோவை சிறையிலிருந்து மாணவி வளர்மதி விடுதலையானார்
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து அவர் கோவை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
Recommended Video
கோவை: மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர் கோவை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு போராட்டங்களில் மாணவி வளர்மதி ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
இதுதொடர்பாக சேலம் காவல்துறையினரால் ஜூலை 13-ஆம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி ஜூலை 17-ஆம் தேதி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
கோவை சிறையில்...
இதனையடுத்து வளர்மதி கோவை மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே தனது மகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
இந்நிலையில் வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
உயர்நீதிமன்றம் ரத்து செய்தது
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 5-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பொன்னுசாமி கலையரசன் உள்ளிட்ட இரு நீதிபதிகள், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இத்தனை நாள்களாக மாணவி என்றும் பாராமல் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெறாத நிலையில் உயர் நீதிமன்றம் தற்போது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இன்று விடுதலை
உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோவை சிறையிலிருந்து இன்று வளர்மதி விடுதலை செய்யப்பட்டார். அவரை ஏராளமான மாணவர்களும், தன்னார்வல அமைப்பினரும் சிறை வாயிலில் வரவேற்றனர்.