என்னைப் பற்றி வதந்தி பரப்பும் "விஷமி"... ஜாக்கிரதை.. வானதி சீனிவாசன் போட்டு தாக்குவது யாரை?
சென்னை: தம்மை பற்றி வதந்தி பரப்பும் விஷமிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. டெல்லி மேலிடத்துக்கு ஒவ்வொரு கோஷ்டியும் புகார் பட்டியல்களை அளித்து வருகிறது.
இதான் ஆளுக்கு ஒரு திசையாக பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் டெல்லி மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
சர்ச்சையில் வானதி
இந்நிலையில் பாஜகவின் வானதி சீனிவாசனை முன்வைத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி தீவிரமாக பரவியது. இதை வானதி சீனிவாசனுக்கு எதிர்கோஷ்டிதான் இந்த வேலையை செய்து வருவதாக கூறப்பட்டது.
பேஸ்புக்கில் விளக்கம்
இதனிடையே தம்முடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சர்ச்சை தொடர்பாக வானதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜைலாக் யாருடையது?
கடந்த சில நாட்களாக என்னையும், என் குடும்பத்தினரையும் Zylog எனும் நிறுவனத்தோடு தொடர்பு படுத்தி பல்வேறு பதிவுகள் செய்யப்படுகின்றன. அது மட்டும் இன்றி ஊடகங்கள் வாயிலாகவும் எனது பெயருக்கு களங்கம் விளைக்கும் வகையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விரும்பத்தகாத சர்ச்சை குறித்து என்னுடைய விளக்கம்: Zylog என்னும் நிறுவனத்தை நிறுவியவர்கள் திரு.சுதர்ஷனம் மற்றும் திரு.ராம் சேஷரத்தினம் ஆகியோர்.
20,000 பங்குகள்
இவர்கள் இருவரும் RSS ஸ்வயம்சேவகர்கள் ஆவர். இவர்கள் எங்களுக்கு 30 வருடங்களுக்கும் மேலாக குடும்ப நண்பர்கள் என்கின்ற காரணத்தால் எனது கணவர் திரு.சீனிவாசன் இவர்களின் நிறுவனத்திற்கு ஆரம்ப காலத்தில் சட்டம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். இதற்கான இந்த நிறுவனம் 2007-ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக(Public Limited Company) மாறிய போது ₹5 மதிப்புள்ள 20,000 share-கள் எனது கணவர் திரு.சீனிவாசனுக்கு அளித்தது.
அப்பிடவிட்டில்...
இதன் அன்றைய மதிப்பு ₹1,00,000(ரூ.ஒரு இலட்சம்) ஆகும். இந்த 20,000 பங்குகளும் தற்போது வரை அவரின் பெயரிலேயே இருக்கிறது, இதனை எனது தேர்தல் Affidavit-இலும் கூட சமர்பித்துள்ளேன், அதற்கான ஆதராம் புகைப்படம் மூலம் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. (இந்த Affidavit நகலை யார் வேண்டுமானாலும் இணையத்தில் எளிதாக பெறலாம்)
சகோதரருக்கு தொடர்பு இல்லை
எனது சகோதரர் சில காலம் இந்த Zylog நிறுவனத்தில் மென்பொருள் சேவை தொடர்பான பணி மட்டுமே செய்து வந்தார். எனது சகோதருக்கு மேற்படி நிர்வாகத்தில், குறிப்பாக நிதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எவ்வித பங்கும் இல்லை.
சிபிஐ விசாரணை உண்மைதான்
இந்நிறுவனம் தற்போது சில சிக்கல்களை சந்தித்து வழக்குகளிலும் சிக்கி அதனை சந்தித்து வருகிறது, CBI புலனாய்வு விசாரணை உட்பட.
எனக்கு பங்கே இல்லை
எனது கணவருக்கு இங்கு 20,000 பங்குகள் இருப்பதை தவிற எனக்கும் இந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. என் பெயரில் இப்போதும், எப்போதும் ஒரு பங்கு கூட இந்நிறுவனத்தில் இருந்தது இல்லை.
ஆதாரம் இருக்கிறதா?
என் மீது அவதூறு எழுதுபவர்கள் தங்கள் வசம் இருக்கும் ஆதாரங்களை CBI வசம் ஒப்படைக்கட்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசில் எந்த ஊழல் குற்றம் நிரூபிக்க பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதை விடுத்து முகநூலில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை தினமும் எழுதுவது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எழுதப்படுவது ஆகுமே தவிற உண்மை ஆகாது.
விஷமிகள்
30 ஆண்டுகாளாக பொது வாழ்க்கையில் இது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களை கடந்து வந்துள்ளேன். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தாக்கத்தின் காரணமாக இன்று ஒரு நபர் ஆண்டு கணக்காக உழைத்து சம்பாதித்த நற்பெயரை ஒரே நாளில் சீர்குலைக்க முடியும். நமது கட்சியினர் உண்மை என்ன என்பதை சற்று ஆராய்ந்து இவ்வாறு சொந்த வாழ்க்கையையும், சம்பந்தம் இல்லாமல் தொடர்புபடுத்தப்படும் குற்றங்களையும் பரப்பும் விஷமிகளிடன் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உமிழக் கூடாது
நான் மீண்டும் கூறுகிறேன் என் மீதான பொய் குற்றங்களை கூறுபவர்கள் கட்சி தலைமையிடத்திலும் ஆதாரங்களை சமர்பிக்க கோருகிறேன். அதை விடுத்து நித்தமும் தனி மனித தாக்குதல்களையும், வக்கிரத்தையும் முகநூலிலும் ஏனைய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் உமிழ்வது அறமற்ற செயல். இந்த குற்றச்சாட்டுகள் என் மீதான தாக்குதல் மட்டுமல்ல. பா. ஜ. க வின் வளர்ச்சிக்கும் - நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலே இந்தப் பதிவு.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
யார் அந்த விஷமிகளோ?