விவசாயிகள் எதிர்ப்பு.... வண்டலூர் பேருந்து நிலையம் ஊரப்பாக்கத்திற்கு இடம் மாறுகிறது?
சென்னை: விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து வண்டலூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.
ஆனால், அரசின் இந்த முடிவிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அரசு தேர்வு செய்திருந்த இடம் விவசாய நிலம் ஆகும். அந்த இடத்தில் தற்போதும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு மக்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்நிலையில், வண்டலூர் புறநகர் பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அருகே ஊரப்பாக்கத்தில் தனியாரிடம் இருந்து இடம் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.