வங்கக் கடலில் வலுவடைந்தது வர்தா புயல்.. ஆந்திராவுக்கு கனமழை எச்சரிக்கை
வார்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும், ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: வார்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும், ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை கன மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், அணைகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளன.
அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால்தான் வட தமிழகத்திற்கு மழை கிடைக்கும். ஆனால் இது வரை அப்படி மழை பெய்யவில்லை. மாறாக பனி பெய்யத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவான 'வார்தா புயல்' மெதுவாக ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வார்தா புயல் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் இரவு 11.30 மணியளவில் தீவிர புயலாக மாறி உள்ளது. மேலும், அது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
வருகிற 12-ந் தேதி மாலை ஆந்திராவில் நெல்லூர் - மசூதிப்பட்டினம் இடையே வர்தா புயல் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது புயல் வலுவிழக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், அங்கு மழை அதிகம் பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனத் தெரிவித்தனர்.
எனவே, மீனவர்கள் யாரும் ஆந்திரா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.