ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே டீசல் விலையை ஏத்தியாச்சா?.. ஜி.கே.வாசன் கண்டனம்!
சென்னை: காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியபோதெல்லாம் கண்டனம் தெரிவித்தது பாஜக. ஆனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த 6 நாட்களிலேயே டீசல் விலையை ஏற்றியுள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணை விலை ஏறும் போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதே போல சர்வதேச சந்தையில் விலை இறங்கும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது.
அப்போதெல்லாம் விலை ஏற்றத்தை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் தேர்தல் பிரசாரத்தின் போது விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்றும், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவோம் என்று கூறிய பாரதீய ஜனதா கட்சி இன்று பதவி ஏற்ற 6 நாட்களிலே டீசல் விலையை 50 பைசா உயர்த்தியிருக்கிறார்கள்.
இது சாதாரண மக்களை பாதிப்பதோடு, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே மத்திய அரசு இந்த விலையேற்றத்தை மக்கள் நலன் கருதி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.