தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் இரண்டு வசதி படைத்த கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாகவே அமைந்திருக்கிறது. தேர்தல் முறையாக நடைபெறாததால் மற்ற கட்சிகள் சம வாய்ப்போடு இந்தத் தேர்தலை சந்திக்க முடியாத நிலை இருந்தது.
அரவக்குறிச்சி-தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை ஜூன் 13-ஆம் தேதிக்கு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் தேதியை இப்போது மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இரண்டு தொகுதி மக்களும் தங்களுடைய தொகுதிப் பிரதிநிதியை உரிய நேரத்தில் தேர்ந்தெடுத்து, சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துக்கு எதிரானது.
எனவே, இரண்டு தொகுதிகளுக்கும் விரைந்து தேர்தல் நடத்த வேண்டும் என தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.