மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தை கூட்டணியாக மாற்ற விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு?
சென்னை: வைகோ தலைமையிலான மக்கள் நலனுக்காக கூட்டியக்கத்தை தேர்தல் கூட்டணியாக மாற்றுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைகோ தலைமையில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து மக்கள் நலனுக்காம கூட்டியக்கத்தை அமைத்துள்ளன. இந்த கூட்டியக்கத்தை தேர்தலுக்கான ஒரு கூட்டணியாக மாற்றுவதில் வைகோ முனைப்புடன் இருக்கிறார்.
அதனால்தான் இந்த கூட்டியக்கத்தில் இடம்பெற்றிருந்த மனித நேய மக்கள் கட்சி வெளியேறியது. ம.தி.மு.க.விலும் எதிர்ப்பு தெரிவித்து பலர் வெளியேறினர். கடந்த 5-ந் தேதியன்று திருவாரூரில் கூட்டியக்கத்தை தேர்தல் கூட்டணியாக அறிவிப்போம் என வைகோ தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி கூட்டணியாக அறிவிக்கப்படவில்லை.
மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தை தேர்தல் கூட்டணியாக்குவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தா. பாண்டியன் தலைமையில் எதிர்ப்பு குரல் வெடித்துள்ளது. அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறதாக கூறப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரையில் இப்போது தேர்தல் கூட்டணி என அறிவிக்கக் கூடாது; முதலில் குறைந்தபட்ச செயல்திட்டத்தை அறிவித்துவிட்டு இதர கட்சிகளையும் இதில் இணைக்க முயற்சிக்க வேண்டும்... அதுவரை காத்திருந்து பின்னர் கூட்டணியாக அறிவிக்கலாம் என்று கருதுகிறார்களாம்.
மேலும் தற்போது உள்ள 4 கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தால் வெல்ல முடியாது என்கிற தயக்கமும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருப்பதால் அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை தி.மு.க. ஒருங்கிணைக்க வேண்டும் என தி.மு.க.வுக்கு தூது விடும் வகையில் திருமாவளவன் பேசிவருவதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
வைகோவைப் பொறுத்தவரையில் எப்படியாவது மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தை கூட்டணியாக்கிவிடுவோம் என்று உறுதியாக நிற்கிறார்.... ஆனால் இதர கட்சிகளோ பொறுத்திருந்து செயல்படுவோம் என்றே சொல்கிறார்கள்.. இதனால் கூட்டணி வேகமெடுக்காமல் ஸ்பீடு பிரேக் மீது நின்று கொடிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.