ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விசிக போட்டியிடவில்லை: திருமாவளவன் அறிவிப்பு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவில்லை என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் களம் காண்கின்றனர். திமுக சார்பில் வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் மதிவாணனும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் வசந்திதேவியை வேட்பாளராக நிறுத்தி விசிக போட்டியிட்டது.
எனவே இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடவில்லை என முடிவெடுத்துள்ளது. ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. மாறுபட்ட கருத்து உள்ளதால் ஆலோசனை நடத்தி நாளை இறுதி முடிவு அறிவிக்கப்படும். மேலும் மக்கள் நலக் கூட்டியக்கம் எந்த முடிவு எடுத்தாலும் விசிக கட்டுப்படும் என்றார்.