அஞ்சாமை, அயராமைதான் ஜெயலலிதாவின் ஆளுமை... திருமாவளவன் புகழாரம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: அஞ்சாமை, அயராமைதான் ஜெயலலிதாவின் ஆளுமை என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற் க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதாவை காப்பாற்ற இயலாமல் போனது மிகுந்த வருத்தமாகும். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சிறு வயதில் தனது தந்தையை இழந்தார். இளம் வயதில் தாயாரை இழந்தார். தனக்கென குடும்பத்தை அமைத்துக் கொள்ளாமல் வாழ்ந்த அவருக்கு லட்சோபம் லட்சம் தொண்டர்கள் அடங்கிய குடும்பத்தின் தலைவியாக தனது வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.
நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர். தமிழக மக்களுக்கு நெடுங்காலம் அரசியல் களத்தில் தொண்டாற்றிட வேண்டியவர் இன்று நம்மிடையே இல்லை. என்பது வேதனை தருகிறது.
எந்த முடிவிலும் பின்வாங்காதவர் ஜெயலலிதா. எந்தச் சூழலிலும் எதற்கும் சமரசம் ஆகாதவர். எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் எதிர்க்க முடிவு செய்து விட்டால் எதிர்த்து மோதி வெல்லக் கூடியவர். அனைத்துப் போராட்டங்களிலும் வெற்றி பெற்ற அவர் உயிருக்கான இருப்புப் போராட்டத்தில் சாதிக்க இயலவில்லை என்பது வேதனை தருகிறது.
தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டவர், புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக, ஈழத் தமிழர்களுக்காக தமது இறுதிக் கால அரசியல் களத்திலே போராடியவர். தமிழ் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தவர். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியவர்.
மாநில உரிமைகளுக்காகவும் மத்திய அரசோடு கடுமையாக போராடியவர். இந்திய அரசு ஜிஎஸ்டி வரிவதிப்பை கொண்டு வந்த சூழலிலே மாநில உரிமைகளைப் பறிக்கும், பாதிக்கும் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர். எல்லா நிலைகளிலு்ம் தனக்கென தனி முத்திர பதித்தவர்.
ஆணாதிக்க சமூகம் இது. இதில் ஒரு பெண்ணாக இருந்து எல்லா சவல்களையும் எதிர்கொண்டவர், சதிகளை முறியடித்தவர் நம்மிடையே இல்லை. அதிமுக தொண்டர்களுக்கும் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அஞ்சாமையும், அயராமையும்தான் அவரது ஆளுமை. அவருக்கென தனி இடம் சிறப்பிடம் உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.