தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை?.. வி.சி.க கேள்வி
ஹிப்ஹாப் தமிழா ஆதி யாருக்காக கொதிக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷானநவாஸ் கேட்டுள்ளார்.
சென்னை: தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி, அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவிபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூநர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஷாநவாஸ் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
தமிழர்களை பொறுக்கிகள் என்று தொடர்ந்து எழுதி வருகிறார் சுப்ரமணிய சுவாமி. தமிழ் இளைஞர்களின் அறப்போரை இழிவுபடுத்தினார் ராதாராஜன். மதம் கடந்த மக்கள் எழுச்சியில் மதவெறியை விதைக்கத் துணிந்தார் எச்.ராஜா.
இவர்கள் மூவருமே ஆர்.எஸ்.எஸ் காரர்கள். அதனால் தான், மக்கள் சினம் கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் அதன் அதிகாரக் குறியீடாக உள்ள மோடியையும் தாக்குகின்றனர். இதில் என்ன பிழை?
சு.சுவாமியும் ராதா ராஜனும் எச்.ராஜாவும் இந்த போராட்டத்தை இழிவு செய்த போது கொதிக்காத ஹிப் ஹாப் ஆதி, இப்போது ஏன் கொதிக்கிறார்? யாருக்காக கொதிக்கிறார்? என்று கேட்டுள்ளார் ஷாநவாஸ்.