ஆர்.கே.நகரில் திமுகவுக்கு வாக்களிக்க ரகசிய உத்தரவு போட்ட திருமாவளவன்?
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு திருமாவளவன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்திருந்தாலும் அக்கட்சியினரை திமுகவுக்கு வாக்களிக்குமாறு திருமாவளவன் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் மேட் பேரவை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியும் வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளன.
இதனால் மக்கள் நலக் கூட்டணி மீண்டும் உடைந்து போயுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியை ஆர்.கே.நகரில் ஆதரிக்க முடியாது; எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றார்.
அதேநேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என ரகசிய உத்தரவை திருமாவளவன் போட்டியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே திமுகவுக்கு மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் திருமாவளவன் இந்த உத்தரவு மார்க்சிஸ்ட் கட்சியை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.