போயஸ் தோட்டம் மட்டுமல்ல.. ஹைதராபாத் திராச்சைத் தோட்டத்தையும் விடமாட்டேன் - தீபா
போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் மட்டுமல்ல ஹைதராபாத் திராட்சைத் தோட்டமும் எனக்கே சொந்தம் என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் ரத்த உறவான தனக்குத்தான் போயஸ்தோட்டத்து வீடும், ஹைதராபாத் திராட்சைத் தோட்டமும் தனக்கே சொந்தம் என்றும், இதற்காக சட்டரீதியாக போராடப்போவதாகவும் தீபா கூறியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று திடீரென்று போயஸ்தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்த தீபா, தம்பி தீபக் உடன் கடுமையாக சண்டை போட்டு தரை லோக்கலுக்கு இறங்கினார். அதுவரை அமைதியாக தீபாவை பார்த்த மக்கள், ஆக்ரோஷ தீபாவை பார்த்தனர். தன்னை தாக்கியவர்களைப் பற்றி பிரதமரிடம் முறையிடுவேன் என்றும் கூறினார் தீபா.
இதனையடுத்து மீண்டும் ஊடகங்களில் பேட்டி என பரபரப்பாகி விட்டார் தீபா. இரட்டை இலையை மீட்பதுதான் தனது லட்சியம் என்று கூறி வந்த தீபா முதல் வேலையாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். தீபாவின் பின்னணியில் சட்ட நுணுக்கம், அரசியல் நுணுக்கம் அறிந்த ஒரு நபர் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமரை சந்திப்பேன்
இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த தீபா, தனது மேட் பேரவையின் பெயரை அதிமுக ஜெ. தீபா அணி என மாற்றியதாக கூறினார். பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
அதிமுகவை வழி நடத்துவேன்
என் மீது சிலர் திட்டமிட்ட அவதூறைப் பரப்பி வருகின்றனர். அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி அதிமுகவை நான் வழிநடத்த வேண்டுமென்பதே என்னுடைய நோக்கம். அதைத்தான் தொண்டர்களும் விரும்புகின்றனர்.
சொத்துக்களுக்கு சொந்தம்
என் பாட்டியின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் அத்தைக்குப் பிறகு அவரது அண்ணனின் வாரிசுகளுக்குத்தான் வரவேண்டும். இதற்கான அனைத்து ஆதாரங்களும், பத்திரங்களும் எங்களிடம் உள்ளன. சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாட சட்டரீதியாக, தர்மத்தின் ரீதியாக தனக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.
அத்தையின் சொத்துக்கள்
போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் வீடு மட்டுமல்ல, என் அத்தைக்கு உரிமையான ஹைதராபாத் திராட்சை தோட்டமும், ஹைதராபாத்தில் உள்ள பங்களா, மணப்பாக்கத்தில் உள்ள வீடு ஆகியவையும் சட்ட ரீதியாக, தார்மீக ரீதியாக உரிமை கோரும் உரிமை எனக்கு உண்டு என்றும் தீபா கூறியுள்ளார்.