8 புதுமுகங்களை வேலூரில் வேட்பாளர்களாக களமிறக்கிய அதிமுக
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ப.நீலகண்டன் ஆகியோருடன் 35 வயதேயான ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட புதுமுகங்கள் எட்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், பாமக-விலிருந்து அதிமுகவுக்குத் தாவியவருமான கலையரசும் களமிறக்கப்பட்டுள்ளார்.
கோ.சி.மணிவண்ணன்
அரக்கோணம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக கோ.சி.மணிவண்ணன் (வயது 41) அறிவிக்கப்பட்டுள்ளார். வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக பொருளாளராக பதவி வகித்து வரும் இவர், 1992-ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பிளஸ் 2 படித்துள்ள இவர், அம்மா பேரவை துணைச் செயலாராகவும் உள்ளார். இவரது மனைவி கோமதி, நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளார்.
என்.ஜி.பார்த்திபன்
சோளிங்கர் தொகுதி அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஜி.பார்த்திபன் (வயது 41) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ., பி.எல் பட்டம் பெற்றவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் கட்சியில் உறுப்பினராக உள்ளார். சென்னை அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அதிமுக மாணவரணி செயலாளராகவும், வேலூர் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளராகவும், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் மற்றும் சோளிங்கர் நகர கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார்.
ஜெயந்தி பத்மநாபன்
குடியாத்தம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயந்தி பத்மநாபன் (வயது 35) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.சி.எஸ்., பி.எல்., படித்து வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2008 முதல் கட்சியில் உறுப்பினராக உள்ள இவர், தற்போது மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட மகளிரணி பொருளாளராக உள்ளார். இவரது கணவர் பத்மநாபன், வேலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக உ்ள்ளார்.
கே.வி.ராமதாஸ்
ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமதாஸ் (வயது 63). தற்போது, ஆற்காடு தொகுதி செயலாளராக உள்ள இவர், கடந்த 1972-ம் ஆண்டு முதல் கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளார். 1986-1991 வரை திமிரி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார். 1989-ல் ஆற்காடு தொகுதியில் சேவல் சின்னத்திலும் 1996-ல் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிஎஸ்ஸி., பி.எட் படித்துள்ள ராமதாஸ், சிப்காட்டில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
ஜி.லோகநாதன்
கே.வி.குப்பம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக ஜி.லோகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். (வயது 54). தற்போது, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக உள்ள இவர், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். கடந்த 2002-ம் ஆண்டு முதல் கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலவை பிரதிநிதியாகவும் கிளைக் கழகச் செயலாளராகவும் ஒன்றிய பிரதிநிதியாகவும் மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.
எம். கலையரசு
அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளராக எம். கலையரசு அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளராக அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், கடந்த பிப்ரவரி மாதம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்தார். கட்சி மாறிய சிலரில் மூவருக்கு மட்டுமே அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இவர் ஒருவர். எம்.காம் படித்த கலையரசு விவசாயம் மற்றும் ஆங்கில மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
ப.நீலகண்டன்
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப.நீலகண்டன் (வயது 64), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2001-2006 வரை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த நீலகண்டன், தற்போது வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். 1986-ல் வேலூர் நகராட்சி வார்டு கவுன்சிலராக இருந்த இவர், 1989-ல் சேவல் சின்னத்தில் வேலூர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1990 முதல் 2002 வரை வேலூர் நகரச் செயலாளராகவும் 1994-1996 வரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பால்வளத் தலைவராகவும் 2002-2006 இல் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
சுமைதாங்கி சி.ஏழுமலை
ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக சுமைதாங்கி சி.ஏழுமலை (வயது 46) அறிவிக்கப்பட்டுள்ளார். 2013-2014 இல் வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த இவர், தற்போது மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், 1986-ம் அண்டு முதல் கட்சியில் உள்ளார். 1991-2001 வரை மேலவைப் பிரதிநிதியாகவும் 2001-2006 வரை கிளை கழகச் செயலாளராகவும், வாலாஜா ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2010-ல் வாலாஜா ஒன்றிய இணைச் செயலாளராகவும் 2010-2011-ல் வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
எஸ்.ஆர்.கே.அப்பு
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ( வயது 38), 2013-2014 இல் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர். மேலும், 2001 முதல் 2009 வரை மேலவை பிரதிநிதியாகவும், 2009 முதல் 2013 வரை இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட அப்பு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பி.காம்., படித்துள்ள இவர், போக்குவரத்து மற்றும் ரயில்வே சப்-கான்ட்ராக்டராகவும் உள்ளார்.
கே.சி. வீரமணி
ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக, தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி களமிறக்கப்பட்டுள்ளார். 2006 முதல் மேற்கு மாவட்டக் கழகச் செயலா ளராகவும் உள்ளார். கடந்த 1993-ம் ஆண்டு முதல் கட்சியில் உறுப்பினராக உள்ள இவர், ஜோலார்பேட்டை கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். பி.ஏ. வரை படித்துள்ள இவர், பீடி தொழிற்சாலையையும் நடத்தி வருகிறார்.
டி.டி.குமார்
திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக டி.டி.குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், திருப்பத்தூர் நகர கழகச் செயலாளராகவும் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராகவும் உள்ளார். பி.காம் வரை படித்துள்ள இவர், திருப்பத்தூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவராகவும் உள்ளார்.
டாக்டர். நீலோபர் கபீல்
வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளராக டாக்டர். நீலோபர் கபீல் நிறுத்தப்பட்டுள்ளார். கழக தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ள இவர், வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளராகவும், மருத்துவரணி செயலாளராகவும் உள்ளார். 2006-ல் அதிமுக கவுன்சிலராகவும் 2011-ல் நகராட்சித் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
ஆர். பாலசுப்பிரமணியம்
ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆர். பாலசுப்பிரமணியம் அறிவிக்கப் பட்டுள்ளார். இவர், வேலூர் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவைச் செயலாள ராகவும், ஆம்பூர் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள பாலசுப்பிரமணியம், தோல் தொழிற்சாலை வைத்திருப்பதுடன், விவசாயமும் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா பாலசுப்பிரமணி தற்போது ஆம்பூர் நகராட்சித் தலைவராக உள்ளார்.