மாதனூர் செம்மரக் கடத்தல் கொலை – கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தங்கவேலு சஸ்பெண்ட்
ஆம்பூர்: செம்மர கடத்தல் வழக்கில் சிக்கி கைதான வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி. தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் அலமேலுரங்காபுரத்தில் மூன்றரை டன் செம்மரம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜூன் 10ம் தேதி தங்கவேலு கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே பா.ம.க. பிரமுகர் சின்னப்பையன் கொலை வழக்கு விசாரணையின்போது, செம்மரக் கடத்தலில், வேலூர் டி.எஸ்.பி தங்கவேலுவும் ஈடுபட்டது தெரியவந்தது.
தகவலறிந்ததும், தலைமறைவான டி.எஸ்.பி தங்கவேலுவை காட்பாடி பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பரதராமி காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அவர் பின்பு ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதி ஆனந்தராஜ் முன் நள்ளிரவு 1.40 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து டி.எஸ்.பி தங்கவேல் ஜூன் 11ம் தேதியன்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.