ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை விமர்சித்த வேலூர் மேயர் மன்னிப்பு கேட்டார்!
வேலூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டதற்காக, வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மன்னிப்பு கேட்டுள்ளார்.
சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
இதையடுத்து முதல்வர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் இழந்தார் ஜெயலலிதா. சிறையிலும் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் குதித்தனர். ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கடையடைப்பு என குதித்தனர்.
இதை விட மோசமாக நீதிபதி மைக்கேல் குன்ஹாவை மத ரீதியாகவும் விமர்சித்து தட்டிகள் வைத்தனர், போஸ்டர் ஒட்டினர், கொடும்பாவிகளையும் கொளுத்தினர்.
உச்சகட்டமாக, வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும், கொடும்பாவி கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.