தமிழகத்தில் சேலம், வேலூரில் சதமடித்த வெயில் - 5 நாளைக்கு வறண்ட வானிலையே!
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை: அக்னி நட்சத்திரம் போல தமிழகம் முழுவதும் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மே மாதங்களில்தான் அதிக அளவு வெப்பம் பதிவாகும்.
அனல் காற்று
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கும் முன்பாகவே சில இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அனல் காற்று வீசி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அஞ்சுகின்றனர். பலரும் பகல் நேரங்களில் முடங்கி வருகின்றனர்.
100 டிகிரி வெப்பம்
வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 101.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சேலத்தில் 100.58 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது. மற்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகத்தான் இருந்தது.
சென்னையில் வெயில்
சென்னை நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரியும், சென்னை விமான நிலையத்தில் 93 டிகிரி வெயிலும் அடித்தது. கொடைக்கானலில் 67 டிகிரியும், ஊட்டியில் 74 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.
வறண்ட வானிலை
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி வெப்பம் பதிவானது. இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.