பணம் கேட்டு தர மறுத்ததால் மாணவி கீர்த்திகாவைக் கொன்றேன் - 10ம் வகுப்பு மாணவனின் திடுக் வாக்குமூலம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவியான கீர்த்திகாவை பலாத்காரம் செய்து கொன்றதாக கைதாகியுள்ள 10 ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்தது ஏன் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலூர் கே.வி.குப்பம் பகுதியில் 6 ஆம் வகுப்பு மாணவியான கீர்த்திகா 16 ஆம் தேதியன்று கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல், கை கால்கள் கட்டபட்ட நிலையில் முட்புதரில் வீசப்பட்டிருந்தது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் அவ்வழக்கில் 10 ம் வகுப்பு மாணவர் ஒருவன் கைது செய்யப்பட்டார். அம்மாணவன் கடனை அடைக்க கொலுசை கேட்டதற்கு கீர்த்திகா தர மறுத்ததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்த மாணவன் அளித்த வாக்குமூலத்தில், "நான் கீர்த்திகாவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது குறுக்கு வழியில் செல்லலாம் என்று கூறி அழைத்தேன். சம்பவ இடத்திற்கு சென்றதும் எனக்கு கடன் இருக்கிறது. பெற்றோர் பணம் தர மறுக்கிறார்கள். உன் கொலுசை கொடு என்று கேட்டேன். அதற்கு கீர்த்திகா மறுத்துவிட்டாள். உன்னைப்பற்றி என் அப்பாவிடம் சொல்வேன் என கூறினாள்.
இதனால் பயந்துபோன நான் அவளது கழுத்தை துப்பட்டாவால் நெரித்தேன். அதில் மயங்கி கீழே விழுந்தாள். பின்னர் கீர்த்திகா தலையில் இரட்டை ஜடையில் கட்டியிருந்த ரிப்பனை எடுத்து அவளது கை, கால்களையும், துப்பட்டாவால் வாயையும் கட்டினேன்.
அங்கு கிடந்த பாட்டிலை எடுத்து தலையில் அடித்தேன். உடைந்த பாட்டிலை எடுத்து மார்பு பகுதியில் குத்தி கொலை செய்தேன். பின்னர் கீர்த்திகாவின் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு மற்றும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அம்மாணவன் வேலூர் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாணவன் புரசைவாக்கம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாணவியின் உடல் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காங்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.