7 பேரின் விடுதலை மோடி கையில் என்றால்.. ராம்நாத்தை எடப்பாடி ஏன் ஆதரிக்கனும்.. வேல்முருகன் சுளீர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை மோடி அரசிடம்தான் உள்ளது என்றால், முதல்வர் ஏன் ராம் நாத்தை ஆதரிக்க வேண்டும் என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஏழு தமிழர் விடுதலையைத் தடுப்பது நாங்கள் அல்ல, மோடி அரசுதான் என்கிறது எடப்பாடி அரசு. அப்படியென்றால் மோடியின் ஜனாதிபதி வேட்பாளரை முதல் ஆளாக ஆதரிப்பது ஏன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்;
நோயுற்ற தன் தந்தையைப் பார்க்க போரறிவாளனை அனுமதிக்க வேண்டும்; அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 15 ஆண்டுகள் நிறைவுற்ற கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்;
சட்டசபையில் அன்சாரி கோரிக்கை
தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்ததற்காக குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்துள்ள "மே 17" இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண் உள்ளிடோரை விடுதலை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரலெழுப்பினார் மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி. இது குறித்து முதல்வர் எடப்பாடிக்கு கடிதமும் எழுதியிருக்கும் தமிமுன் அன்சாரி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் இதற்காக குரலெழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. தமிமுன் அன்சாரியின் இந்தக் கோரிக்கைகளுக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
அமைச்சரிடம் பதில் இல்லை
ஏழு தமிழர் விடுதலை குறித்துப் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், "அவர்களின் விடுதலையைத் தடுப்பது மத்திய அரசுதானே தவிர நாங்களல்ல" என்கிற ரீதியில் பேசினார். 15 ஆண்டு சிறைக் கைதிகள் விடுதலை விடயத்தில் மழுப்பிய சண்முகம், திருமுருகன் காந்தி பற்றி பதிலளிக்கவே இல்லை.
மத்திய அரசு எதிர்ப்பு
ஏழு தமிழர்களையும் கடந்த 19.2.2014ல் ஜெயலலிதா தலைமையிலான அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய, இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விட்டது. அதில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜேஷ் திரிவேதி ஆஜராகி, "7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. வேண்டுமென்றே மத்திய அரசு எதிர்க்கிறது. எனவே தடையை நீக்க வேண்டும்" என்று வாதாடினார்.
மோடி கையில்..
ஆனால் உச்ச நீதிமன்றம் தடையை நீக்கி தீர்ப்பு கூறிவிடாதபடி மோடி அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. காரணம் தமிழர் என்பதே மோடிக்குப் பிடிக்காத சொல். இந்நிலையில் "மோடிதான் 7 பேர் விடுதலையைத் தடுக்கிறார்;நாங்களல்ல" என்பது போல் பதிலளித்து தமிழர்களை வழக்கம்போல் எளிதாக ஏமாற்றிவிட்டதாக எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.
எடப்பாடி ஏன் ராம்நாத்தை ஆதரிக்க வேண்டும்?
ஆனால் அந்த விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் மோடியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முதல் ஆளாக முண்டியடித்துச் சென்று ஆதரிப்பது ஏன் எனக் கேட்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. மோடி முட்டுக்கட்டை போட்டாலும் அதையும் தாண்டி ஏழு தமிழரையும் விடுதலை செய்ய முடியும்.
தமிழக அரசின் கையில்..
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்161ஆவது பிரிவின்படி அதற்கான உரிமை மாநில அரசுக்கு உள்ளது.
அதாவது 7 தமிழர்களையும் விடுதலை செய்வதாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் அதில் கையெழுத்திட்டு விடுதலை செய்ய முடியும். இதனை ஏன் செய்யாமல் இருக்கிறது எடப்பாடி அரசு?
தலையில் கல்லைப் போட்ட முதல்வர்
தமிழகத்தை சுத்தமாகவே துடைத்து விட மோடி துணை நிற்பார் என்பது தான் அந்த காரணமா?
7 தமிழர் விடுதலை மட்டுமல்ல; மருத்துவக் கல்லூரி நீட் நுழைவுத் தேர்வு, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் போன்றவற்றிலும் மோடியின் சொற்படி தமிழர்களின் தலையில் கல்லைப் போட்டது எடப்பாடி அரசு என்று வேல்முருகன் கூறியுள்ளார்.