ஜிஎஸ்டியிலும் சோடைபோய்.. மாநில உரிமையை காவு கொடுத்த தமிழக அரசு.. வேல்முருகன் வேதனை
ஜிஎஸ்டியிலும் தமிழக அரசு சோடை போய் விட்டதாக தமிழக வார்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: மாநில உரிமையை காவு கொடுத்து ஜிஎஸ்டியில் மோடியோடு கைகோர்த்துள்ள தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. அதுபோல் இப்போது 2017 ஜூலை 1 நள்ளிரவில் ஜிஎஸ்டியும் அறிவிக்கப்பட இருக்கிறது.
சுதந்திரம் யாருக்கு என்ற கேள்வி இன்றும் கேட்கப்படுகிறது. அதேபோல் ஜிஎஸ்டியும் யாருக்காக என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிகமான வரி
ஒரே பொருளுக்கு பலதரப்பட்ட வரிகள் இருப்பதை ஒழித்து ஒரே வரி என்பதாக சொல்லப்படுவதுதான் ஜிஎஸ்டி வரி. ஆனால் இந்த ஒரே வரி (ஜிஎஸ்டி வரி) அந்தப் பல வரிகளின் ஒட்டுமொத்தத்தையும் விட அதிகமாக இருப்பதுதான் பிரச்சனையே!
சிறு, குறு தொழிலாளர் பாதிப்பு
இதனால் பல தரப்பிலிருந்தும் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு வெடித்துள்ளது. குறிப்பாக சிறு, குறு தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். காரணம் ஜிஎஸ்டியினால் அவர்கள் முற்றாகப் பாதிக்கப்படுவர் என்பதுதான்.
துணி உற்பத்தியாளர் அதிருப்தி
இதனால் சிறு, குறு தொழில் அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது கைத்தறி-விசைத்தறி துணி உற்பத்தியாளர் மற்றும் பட்டாசு தயாரிப்பாளர்களும் ஜிஎஸ்டிக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளனர்.
நெசவுத் தொழில் பாதிப்பு
தமிழகத்தின் முதன்மைத் தொழில் விவசாயம் என்றால் அதற்கடுத்து வருவது நெசவுதான். இந்தத் தொழிலிலும் இதனோடு சார்ந்த வணிகத் தொழிலிலுமாக ஏறத்தாழ ஒரு கோடி பேராவது பிழைக்கக்கூடும்.
கார்ப்பரேட் மயம்
முக்கால் வாசி அமைப்பு சாரா தொழிலாக இயங்கும் இந்த நெசவுத் தொழில் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படுவதால் அதை இனியும் தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழில்களை கார்ப்பொரேட்மயமாக்கவே சிறு, குறு தொழில்களை ஜிஎஸ்டி மூலம் அழிக்கும் இந்த முயற்சி என்பதுதான் பொருளியல் வல்லுநர்களின் குற்றச்சாட்டு.
செயல்படாத தமிழக அரசு
பட்டாசுத் தொழிலில் உலகிலேயே சீனத்துக்கு அடுத்த இடம் தமிழகத்துக்குத்தான். இதுவும் ஜிஎஸ்டியினால் அழிவை சந்திக்கும் என்றே எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கெல்லாம் ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படாததே காரணம் என்கின்றனர் அந்தந்த தொழில் சார்ந்த அமைப்பினர்.
பெட்ரோல், மதுவுக்கு ஜிஎஸ்டி ஏன் இல்லை?
நடுவண் அரசும் தமிழக அரசும் இதில் கூட்டாக செயல்பட்டிருக்கின்றன; நடுவண் அரசு சார்ந்த பெட்ரோலும் தமிழக அரசு சார்ந்த மதுவும் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதிலிருந்தே இதை அறிந்துகொள்ளலாம்.
ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல
ஒற்றை வரி விதிப்பு என்பது மன்னர் காலத்தியது. அரசு வேறு, மக்கள் வேறு என்று பிரிப்பது. இது மக்களாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் நேர் மாறானது.
தோற்றுப் போன உலகமயம்
உலகமயம் என்ற கார்ப்பொரேட் மய கோட்பாடு இன்று தோற்றுவிட்ட ஒன்று. அதன் விளைவுகளே அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனின் விலகல்.
பணக்காரர்கள் பக்கம் மோடி
ஆனால் காலாவதியாகிப் போனதையே கண்ணில் ஒற்றிக் கொள்கிறது மோடி அரசு. காரணம் பழமைவாத, வலதுசாரி எண்ணங்களே. பணக்காரர்கள் பக்கம் நிற்பதைத் தவிர வேறு கொள்கை எதுவும் கிடையாது மோடிக்கும் அவரது பாஜகவுக்கும்.
காவு கொடுக்கப்பட்ட உரிமை
மாநில உரிமையை காவு கொடுத்து ஜிஎஸ்டியில் மோடியோடு கைகோர்த்துள்ள அம்மா அதிமுக எடப்பாடி அரசை சிறு, குறு தொழிலர்கள் மற்றும் வணிகருடன் சேர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் வேல்முருகன் கூறியுள்ளார்.